அல்குர்ஆனின் இதயம் சூரா யாஸீனாகும், மரணித்தவர்களுக்காக அதனை ஓதுங்கள்.
(முபாரிஸ் ரஷாதிக்கு மறுப்பு – தொடர் 01)
மௌலவி எம்.ஏ.எம் அஸ்மிகான் முஅய்யிதி முபாரிஸ் ரஷாதி இத்தலைப்பில் மூன்று விடயங்களை கூறியுள்ளார்.
1- மரணித்தவர்களுக்கு ஸூரா யாஸீனை ஓதுங்கள் என்ற ஹதீஸ் பலவீனமானது
2- ஸூரா யாஸீன் குர்ஆனின் இதயம். (இந்த ஹதீஸ் பற்றிய தெளிவான நிலைப்பாட்டை கூறவில்லை)
3- ஒரு அறிவிப்பாளர் பற்றி சிலர் குறை விமர்சனம் செய்திருக்கும் வேளையில் மற்றும் சிலர் அவரை நியாயப்படுத்தியிருப்பின் அவர் விடயத்தில் குறை விமர்சனமே முற்படுத்தப்படும். அவரை நியாயப்படுத்தியிருப்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தாலும் சரியே என்ற ஹதீஸ் கலை நியதி
1- மரணித்தவர்களுக்கு ஸூரா யாஸீனை ஓதுங்கள்
உங்களில் மரணித்தவர்களுக்கு அல்லது மரண தருவாயில் உள்ளவர்களுக்கு சூரா யாசினை ஓதுங்கள் என்ற ஹதீஸ் மஃகில் இப்னு யஸார் (ரழி) அவர்களைத் தொட்டும் முஸ்னத் அஹ்மத், அபூதாவூத், இப்னு மாஜா, நஸாஈ, இப்னு ஹிப்பான், ஹாகிம் போன்ற இன்னும் பல கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளன.
இது ஹஸனான ஹதீஸாகும். இந்த ஹதீஸை இரண்டு ஹதீஸ் கலை அறிஞர்கள் ஸஹீஹ் என்றும் மற்றும் இரு அறிஞர்கள் ஹஸன் என்றும் கூறியுள்ளார்கள்.
ஸஹீஹ் எனக் கூறிய அறிஞர்கள்
1- இமாம் இப்னு ஹிப்பான் (றஹ்). (இஹ்ஸான் (3002)
2- இமாம் ஸுயூதி (றஹ்).
ஹஸன் எனக் கூறிய அறிஞர்கள்
1- இமாம் அபூ தாவூத் (றஹ்).
(இமாம் அபூ தாவூத் (றஹ்) அவர்களின் நியதிப் படி இந்த ஹதீஸை அறிவித்த பின் வாய்மூடி இருந்துள்ளதால் இது ஹஸனான ஹதீஸாகும்).
2- ஹாபில் முன்திரி (றஹ்). (தக்ரீஜு அஹாதீஸில் முஹத்தப்)
எனவே நான்கு முற்காலத்து அறிஞர்கள் ஆதாரபூர்வமானது எனச் சொல்லியிருக்கும் போது அதை ஏற்பதே தனது தகுதியை அறிந்தவருக்கு சிறந்ததாகும். அதற்கன காரணங்களப் பார்ப்போம்
இதன் அறவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஸுலைமான் இப்னு தர்கான் நம்பிக்கையானவரும் நான்காம் படித்தரத்தை சார்ந்த வருமாகும். (தக்ரீப் – 2575) அதாவது சில ஸஹாபாக்களை சந்தித்தவராகும். அவ்வாராயின் அவரது ஆசிரியராகிய அபூ உஸ்மான் பெரிய தாபியீன்களில் ஒருவர் என்பதை அறிய முடிகிறது. இவர் நிலை அறியப்படாதவராகும். எனவே அவரைத் தொட்டும் ஒருவர் மாத்திரம் அறிவித்திருப்பதால் “மஜ்ஹூலுல் அய்ன்” என்ற வகையைச் சார்ந்தவராகும். இவ்வாரான ஒருவரின் அறிவிப்பை “முதாபஆத்” (சேர்ந்து அறிவித்தல்) “ஷவாஹித்” (சான்றுகள்) மூலம் பலப்படுத்த முடியும் என்பது ஹாபில் இப்னு ஹஜர் இமாமின் தீர்ப்பாகும்.
எனவே ஒரு அறிவிப்பை மாத்திரம் பார்த்து விட்டு ஹதீஸுக்கு தீர்ப்புச் சொல்ல முற்படக் கூடாது. இந்த ஹதீஸுக்கு பல சான்றுகள் இருக்கின்றன.
1- இமாம் அஹ்மத் முஸ்னதில் (4/105) அறிவித்துள்ளார்கள்: குழைப் இப்னு ஹாரிஸ் அஸ்ஸுமாலி (றழி) மரணத் தருவாயில் இருக்கும் போது யாஸீன் ஸூராவை ஓதுங்கள் என்றார்கள். அப்போது ஸாலிஹ் இப்னு ஷுரைஹ் (றஹ்) யாஸீன் ஸூராவின் நாற்பதாவது வசனத்தை ஓதிக்கொண்டிருக்கும் போது மரணித்தார்கள். மேலும் மய்யித்திடம் யாஸீன் ஸூராவை ஓதினால் வேதனை இலேசாக்கப்படும் என பல தாபியீன்கள் கூறியுள்ளார்கள்.
இது ஹஸனான அறிவிப்புத் தொடரைக் கொண்டது என ஹாபில் இப்னு ஹஜர் (றஹ்) இஸாபாவில் (3/184) கூறியுள்ளார்கள்.
குழைப் இப்னு ஹாரிஸ் அஸ்ஸுமாலி (றழி) ஒரு ஸஹாபியாகும். அவர்கள் மரணத் தருவாயில் யாஸீன் ஸூராவை ஓதும் படி கூறியது அவர்கள் அறிந்து வைத்திருந்த ஹதீஸின் அடிப்படையிலாகும். ஏனெனில் இது சிந்தித்துக் கூற முடியாத விடயமாக இருப்பதால் இதற்கு மர்பூஉடைய சட்டமாகும்.
2- ஒருவர் மரணிக்கும் போது யாஸீன் ஸூரா ஓதப்பட்டால் அல்லாஹு தஆலா அவரது வேதனையை இலகுபடுத்துவான்.
அறிவிப்பவர் அபூ தர் (றழி), அல்மதாலிபுல் ஆலியா (806)
இது பலவீனமான ஹதீஸாக இருந்தாலும் இதற்கு மஃகில் இப்னு யஸார் (றழி) அவர்களின் ஹதீஸ் சான்றாக இருக்கிறது என்று இமாம் பூஸீரி (றஹ்) கூறியுள்ளார்கள். முக்தஸருல் இத்ஹாப் (2156)
எனவே இந்த ஹதீஸ்
ஆதாரபூர்வமானது என்பதில் எவ்வித சநதேகமுமில்லை. இந்த அடிப்படையிலே அன்று தொட்டு
இன்று வரை முஸ்லீம்களின் பெரும்பான்மை சமூகத்தின் நடைமுறை இருந்து வருகிறது. அவர்களை
பிரிந்து செல்வதை விட்டும் அல்லாஹு தஆலா எம்மை பாதுகாப்பானாக. அல்லாஹு தஆலாவே மிக அறிந்தவன் (தொடரும்)
No comments:
Post a Comment