Wednesday, October 4, 2017

ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 02

ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 02

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

முன்னுரை

படைப்புகளில் மிகவும் சிறந்தவர்களும், எங்கள் தலைவரும், எங்கள் நேசரும், கண் குளிர்ச்சியுமாகிய முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதயத்தைக் கொண்டு இந்த உலகத்தை ஒளிமயமாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உண்டாவதாக. அவர்கள் மீது அல்லாஹு தஆலா சூரியன் உதிக்கவும், சந்திரன் பிரகாசிக்கவும் செய்யும் காலமெல்லாம் ஸலாத்தும், ஸலாமும் சொல்வானாக. அல்லாஹ்வின் நேசர்களின் ஒன்று கூடல்களை அவனது புனித மார்க்கத்தினாலும் முன்னோர்கள் பின்னோர்கள் அனைவருக்கும் தலைவராக இருப்பவரின் வழிகாட்டலாலும் பலப்படுத்தப்பட்டதாக அமைத்திருக்கும் அல்லாஹ்வின் மீது எல்லா புகழும் உன்டாவதாக. எங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மீது அல்லாஹு தஆலா மிகச்சிறந்த ஸலவாத்தையும் ஸலாமையும் அருல் புரியப்பட்ட காணிக்கைகளையும் கியாமத்து நாள் வரை சொல்லியருள்வானாக.
 இந்நூலில் உள்ள விடயங்களை அல்லாஹு தஆலாவே எங்களது உள்ளங்களிலிருந்து ஊற்றெடுக்கச் செய்தான். நாங்கள் குறையுள்ளவர்களாக இருந்த போதிலும் எங்களது சகோதரர்கள் எங்கள் மீது வைத்துள்ள மதிப்பின் காரணமாக இது புத்தியுள்ளவர்களுக்கு படிப்பினையாகவும் அருளாகவும் ஆகிவிடும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
 குர்ஆன், ஹதீஸ், பகுத்தறிவு ஆதாரங்களுடன் நெஞ்சிலிருந்து வெளிப்படும் திக்ரை பற்றியே நாம் எழுத இருந்த போதும் எமது அன்புக்குறிய சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்க சப்தமிட்டு திக்ரு செய்தல், கூட்டாக திக்ர் செய்தல், கஸீதாக்களை பாடுதல், கேட்டல், அசைதல், ஆடுதல் போன்ற விடயங்களையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
 முதலாவதாக நெஞ்சியில் இருந்து வெளிப்படும் ஆஹ், அஹ் என்ற திக்ரைப்பற்றியே தெளிவுபடுத்த விரும்புகிறோம். இதன் மூலம் வாசகர்கள் அவர்களது தேடுதலை, எதிர்பார்ப்பை அடைந்து அல்லாஹு தஆலாவின் நேசர்கள் மீது நல்லெண்ணம் கொள்வார்கள் என்றும், உள்ளத்திலே இவைகளை பதியவைத்து எத்திவைப்பார்கள் என்றும் நம்புகிறோம். தரீக்கத்து வாதிகளுக்கு அவர்களது உள்ளம் அமைதி பெறுவதற்கு ஒரு ஆதாரம் போதுமானதாகும். அவர்கள் ஹலராவின் போது அல்லாஹ்வை திக்ர் செய்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறும் நிலையை அடைவதையை எதிர்பார்ப்பார்கள். அல்லாஹு தஆலா திருமறையில் 'அல்லாஹ்வை திக்ர் சைய்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறும்' என்ற வசனத்தில் சொல்லப்பட்ட அமைதியைப் பெற்று நற்பயன் அடைவதே அவர்களின் நோக்கமாகும்.
யாரிடம் அல்லாஹ்வின் நேசர்கள் விடயத்தில் தெளிவும் அழகிய எண்ணமும் இருக்கின்றதோ அவர்களுக்கும், உண்மையை, ஸூபியாக்களின் திக்ர்கள் மார்க்கத்திற்கு  உட்பட்டவை என்பதை அறிய ஆவலோடு இருக்கும் அனைவருக்கும் பயனளிப்பதை கேட்கிறோம்.
நெஞ்சில் இருந்து வெளிப்படும் ஆஹ் என்ற திக்ரை மொழிவதன் மூலம் அல்லாஹ்வின் நேசர்களுக்கு தனிப்பட்ட வித்தியாசமான ஒரு வகை பூரிப்பு, இன்பம் ஏற்படுகிறது. இது அல்லாஹு தஆலாவுடன் மிகுந்த தொடர்புடன் இருக்கும் போது ஏற்படும் காதலின் பிரார்த்தனையின் சம்பாசனையின் உள்ளம் அழுவதின் சஞ்சலப்படுவதின் வெளிப்பாடாகும். இந்த முறைப்படி திக்ர் செய்யும் நிலை குர்ஆன் வசனங்களின், முன்னோர்களது கஸீதாக்களின் அர்த்தங்களை விளங்கி அதன் இராகங்களை இரசிக்கும் போது ஏற்படும் உணர்வுகளின் வெளிப்பாடாகும். இந்த உணர்வுகளை அதிகரிக்கக் கூடிய விடயங்களில் ஒன்றுதான் நெஞ்சில் இருந்து வெளிப்படும் ஆஹ் என்ற திக்ராகும். இதன் போது அல்லாஹு தஆலாவுடன் பேரின்பக் காதலும் எல்லையற்ற சம்பாசனையும் ஏற்பட்டு உள்ளம் தெளிந்து ஆத்மா நிம்மதி அடைகின்றது. அதன் பின்னால் அல்லாஹு  தஆலா எம்மை எல்லா நிலைகளிலும் கண்கானித்துக் கொண்டு இருக்கின்றான் என்ற ஆலமான உணர்வும் ஏற்படுகின்றது.

'ஆஹ்' என்ற சொல்லின் பொருள்கள்
1. அல்லாஹ்வின் திரு நாமங்களில் ஒன்று
2. கவலை, அடையவேண்டுமென்ற ஆசை மிகைக்கும் போது நெஞ்சிலிருந்து வெளிப்படும் சப்தம்.
3. ஸுர்யானி பாசையில் 'ஆஹ்' என்றால் அல்லாஹ் என்ற பொருள்.

அல்லாஹ்வின் திரு நாமங்களில் ஒன்று
'ஆஹ்' என்பது அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று எனக் கூறும் அறிஞர்கள் இரு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள்.
1. ஆஹ் என்ற சொல்லே அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று.
2. அல்லாஹ் என்ற சொல்லிலிருந்து சுருக்கப்பட்டது.

1- 'ஆஹ்' என்ற சொல்லே அல்லாஹ்வின் திரு நாமங்களில் ஒன்று
இக்கருத்துக்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாக எடுக்கப்படுகிறது:
 யா அல்லாஹ் நீ உனக்கு என்னென்ன திருநாமங்களை வைத்திருக்கிறாயோ அவை அனைத்தைக் கொண்டும், அல்லது உனது மறைவான அறிவில் எதை தெரிவு செய்து வைத்திருக்கிறாயோ அவை அனைத்தைக் கொண்டும், அல்லது உனது வேதத்தில் இறக்கிவைத்த, அல்லது உனது படைப்புகளில் யாராவது ஒருவருக்கு கற்றுக்கொடுத்த அனைத்தைக் கொண்டும் உனது மகத்தான அல்குர்ஆனை உள்ளங்களுக்கு வசந்தமாகவும், கவலைகளை தீக்கக்கூடியதாகவும் இன்னும் .......  ஆக்கும்படி கேற்கிறேன்.
இது ஸஹீஹான ஹதீஸாகும். முஸ்னத் அஹ்மத் (452), இப்னு அபீ ஷைபா (முஸன்னப் - 29398) தப்ரானி (கபீர் – 10352), இப்னு ஹிப்பான் (972), பைஹகி (தஅவாதுல் கபீர் – 164) ஹாகிம் (முஸ்தத்ரக் -1690) 
இதில் உனது படைப்புகளில் யாராவது ஒருவருக்கு கற்றுக்கொடுத்த அனைத்து திருநாமங்களைக் கொண்டும் கேட்கிறேன் எனக்கூறப்பட்டுள்ளது. அதாவது ஆஹ் என்ற திருநாமத்தை அல்லாஹு தஆலா அவனது தூய அடியார்களாகிய சூபிய்யாக்களில் ஒருவருக்கோ, பலருக்கோ கற்றுக்கொடுத்து அதையே ஏனைய சூபிய்யாக்களும் ஷெய்குமார்களும் நடைமுறைப்படுத்தி வந்துள்ளார்கள். மார்க்க விடயங்களில் நல்ல அறிவும், நடைமுறையும், பேனுதலும் உள்ள சூபிய்யாக்கள் மாரக்கத்துக்கு முரணான காரியங்களை செய்யமாட்டார்கள் என்பது தெளிவான விடயமாகும். அவர்கள் மார்க்கத்துக்கு முரணான காரியங்களை செய்யாததினாலே அவர்கள் அல்லாஹ்வின் நேசர்களாகவும் இறை அன்பை பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அவர்களைப்பற்றி நல்லெண்ணம் கொள்வதே ஒரு முஃமினின் ஈமானைப் பாதுகாக்க சிறந்த வழியாகும். இல்லாவிட்டால் அவர்களைப் பகைத்து நிந்தித்து அல்லஹ்வுடன் யுத்தம் செய்ய தயாராகி நாஷமடைந்து விடுவதில் எவ்வித சந்தேகமுமில்லை. அல்லாஹு தஆலா எம்மை பாதுகாப்பானாக!
 மேலும் 'முனங்குவது (அனுங்குவது) அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று'  என்ற ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸும் இதற்கு ஆதாரமாக இருக்கின்றது. (அதன் தரம் பற்றி பின்னர் கூறப்படும்)


No comments:

Post a Comment