ஸகாத் பெறும் பீஸபீலில்லாஹ் கூட்டத்தவர் பற்றிய தெளிவு - தொடர் -02
மார்க்க சட்டத் தெளிவும்
கர்ளாவிக்கு மறுப்பும்
ஸகாத் விநியோகிக்கும் முறையின் வரையரைகளை
அல்லாஹுத்தஆலா வரையரையிட்டுள்ளான். நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
அடிப்படைகளை வஹிமூலம் அறிவிக்கப்பட்டு அவர்களும் உம்மத்துக்கு
எத்திவைத்துள்ளார்கள். எனவே யாருக்கும் அந்த சட்டங்களை, அடிப்படைகளை மீறுவதற்கோ, வஹி இறங்கிய நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்
அவர்களைவிட நான் நன்றாக விளங்கிக் கொள்கிறேன் எனக் கூறவோ முடியாது.
ஆல்லாஹுத்தஆலா திருமறையில் ஸகாத் கொடுக்கப்பட
வேண்டியவர்களை உறுதியாக கூறிவிட்டு அதை மேலும் உறுதிப்படுத்தி 'அல்லாஹுத்தஆலாவிடமிருந்து வரக்கூடிய கடமை
எனவும் உறுதிப்படுத்தியுள்ளான். எனவே அல்லாஹுத்தஆலா பங்குவைத்துக்காட்டிய முறை
இல்லாமல் வேறு முறையில் பங்குவைக்க யாருக்கம் அனுமதி கிடையாது என இமாம் ஷாபிஈ
றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
ஸகாத் எனும் தானமெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூலிப்பவர்களுக்கும், புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வதுக்கும், கடனில் மூழ்கியவர்களுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் போர்செய்வதற்கும், வழிப்போககர்களுக்கும் உரித்தானதாக அல்லாஹ்
ஏற்படுத்தியதாகும். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கிறான்.
(தவ்பா :60) என்ற திருக்குர்ஆன் வசனத்தை
இமாம் ஷாபிஈ றஹ்மதுல்லாஹி அலைஹி குறிக்கிறார்கள்.
இத்திருவசனத்தில் அல்லாஹூத்தஆலா கூறியிருக்கும்
எட்டு கூட்டத்தவர்களைத் தவிர்த்து வேறு கூட்டத்தாருக்கு ஸகாத் கொடுக்கவும் கூடாது அது செல்லுபடியாகவும்
மாட்டாது. 'பீ ஸபீலில்லாஹ்' என்பதன் மூலம் நாடப்பட்டவர்கள் யுத்தத்தில்
ஈடுபடுபவர்கள், காபிர்களுடன் போராடக்கூடிய, ஊர்களை, எல்லைகளை பாதுகாக்ககூடிய இலவசமாக போராடும் போராளிகளையே
குறிக்கிறது. இவர்கள் பைத்துல்மாலிலிருந்து, அரசாங்கத்திடமிருந்து ஊதியம் பெறாதவர்களாகும்.
இமாம் அஹ்மத் றஹிமஹுல்லாஹ் அவர்களும் வேறு சில அறிஞர்களும் ஹஜ் செய்ய
வசதியற்றவர்களுக்கு போதுமான தொகையை கொடுக்க முடியும் என அதைப்பற்றி குறிப்பிடும்
தெளிவான ஆதாரத்தை மையமாக வைத்து மார்க்கத் தீர்;ப்பு வழங்கியுள்ளார்கள்.
இவர்களைத்தவிர உண்டானவர்களுக்கு
இந்தப்பங்கிலிருந்து ஒரு ரூபாவோ அதைவிட அதிகமாகவோ கொடுக்க முடியாது. அவர்கள் தனி
நபர்களாக இருந்தாலும் சரி இயக்கமாக, சங்கமாக ஈடுபடுபவர்களாக இருந்தாலும் சரி. உலமாக்களாகவோ, அறிவைத்தேடும் மாணவர்களாவோ, பொதுமக்களாவோ யாராக இருந்தாலும் சரியே. அல்லது
ஒரு அதிகாரிக்கு சம்பளம் வழங்கவோ, ஒரு புத்தகத்தை வெளியிடவோ, பள்ளிவாயல் கட்டவோ, பாடசாலை, தொழுகை அறை அமைக்கவோ, ஒரு மாநாடு நடத்துவதற்கு செலவளிக்கவோ முடியாது. ஆனால்
கர்ளாவி இதற்கு மாற்றமாகவே செயல்படுகிறார்.
இவ்வாறுதான் நபி ஸல்லல்லஹு அலைஹி வஸல்லம்
அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். ஸஹாபாக்களும், தாபியீன்களும், தபவுத்தாபியீன்களும் அவர்களைத் தொடந்து வந்த
தலைசிறந்த அறிஞர் பரம்பரையினரும் வாழ்ந்து காட்டியதோடு இந்த சமுதாயம்
நிலைத்திருந்த போதும் வீழ்ச்சியடைந்த போதும் பித்அத்வாதிகள் தலைதூக்கிய போதும்
விழ்ச்சியடைந்த போதும் இவ்வாறுதான் மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள்.
எனவே யூசுப் கர்ளாவிக்கோ ஏனையவர்களுக்கோ
அவர்களின் பேச்சுக்கு மாற்றமாக, ஏகோபித்த முடிவுக்கு மாற்றமாக திர்ப்பு வழங்க முடியாது. இது
போன்று மார்க்கத் தீர்ப்புகள் வழங்கப்படுமானால் அதை அமுல்படுத்தவும் கூடாது
திரும்பிப்பார்க்கவும் கூடாது.
மார்க்க சட்டம் என்பது ஸஹாபாக்களும், தாபியீன்களும் தபவுத்தாபியீன்களும்
குர்ஆனிலிருந்தும் சுன்னாவிலிருந்தும் அறபு மொழி அடிப்படையில் விளங்கியதாகும்.
தற்காலத்தில் தோன்றும் அறிஞர்கள் ஏற்படும் புதுப்புது நிகழ்வுகளுக்கு பதில்
சொல்வது மாத்திரமே அவர்களின் பொறுப்பாகும். முற்காலத்தில் வாழ்நத ஸஹாபாக்களின்
மொழியை, பேச்சுவளக்கை அறிந்த
அறிஞர்கள் விளங்கியதற்கு மாற்றமாக மார்க்கத்தில் அபிப்பிராயங்களை வெளியிட
முடியாது. அவர்கள்தான் வஹி இறங்கும் போது இருந்தவர்களின் அறிவை கற்றுக்
கொண்டவர்களாகும். அவர்கள் எதை விளங்கினார்களோ அதுதான் சரியான விளக்கமாகும். எதை
ஆதாரமாக ஏற்க முடியாது எனக் கூறினார்களோ அது பின்பற்ற தகுதியற்றதாகும்.
தற்காலத்து மார்க்க அறிஞர்களின் பணி முற்கால
அறிஞர்கள் பேசாத விடயத்திலும் கருத்துவேற்றுமை கொண்ட விஷயத்திலுமாகும். இவ்வாறு
ஈடுபடுபவர்களுக்கு நிபந்தனைகள் தகுதிகள் இருக்கவேண்டும். முன்பு உருவாகாத புதிதாக
ஏற்படும் ஒரு நிகழ்வுக்கு மார்க்கத்தீர்ப்பு வழங்குபவர் அதிலே தெளிவான ஆதாரம்
இல்லாத போது அவர் இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபிஈ, இமாம் மாலிக், போன்ற ஒரு முஜ்தஹித் அறிவாராய்ச்சியாளராக இருக்கவேண்டும்.
அல்லது அஸ்ஹாபுல் வுஜூஹ் எனப்படும் மத்ஹபுகளின் சட்டவிதிகளுக்கமைய கருத்துத்
தெரிவித்த இமாம் முதவல்லி,
இமாம்
புல்கீனி பொன்றவர்களைப் போல் தகுதியுள்ளவராக இருக்கவெண்டும். இந்த தரத்தை
அடையாதவர்களுக்கு சட்டங்களை வகுத்து சொல்வதற்கான அதிகாரம் கிடையாது. எனவே
சட்டங்களை வகுத்தெடுக்கும் ஆற்றல் உள்ளவர்களை பின்பற்றுவதே அவருடைய தகுதிக்கு
ஏற்றதாகும்.
கலாநிதி கர்ளாவி இந்த மேன்மையான தரத்தை
அடையவில்லை அவரால் அடையவும் முடியாது என்பதே தெளிவானதாகும். எனவே கர்ளாவியும் அவர்
போன்றவர்களும் தனிப்பட்ட கருத்துக்களை கூறாமல் இமாம்களின் கருத்தை
பின்பற்றுவதே கடமையாகும்.
ஸகாத்பெறத்தகுதியானவர்கள் பற்றிப்பேசும்
ஆயத்தில் குறிப்பிடப்படும் 'பீ ஸபிலில்லாஹ்' எனப்படுபவர்களில் ஒரு சங்கத்தின் செயல்பாடுகள்
அடங்கமாட்டாது. எனவே அதன் செயல்பாடுகளுக்கோ, செலவுக்கோ ஸகாத் கொடுக்க முடியாது. கர்ளாவி கொடுத்த பத்வா
மிகப்பிழையானதாகும். குர்ஆனுக்கும், ஹதீஸூக்கும், முஜ்தஹிதான அறிஞர்களின் ஏகோபித்த முடிவுக்கும் நேரடியாக
முரண்படக்கூடியதால் அதை அமுல்படுத்த முடியாது.
இஸ்லாத்தின விரோதிகளுக்கெதிராக சிந்தனைப்
போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு வேறு வழிகளில் செலவளிக்க வேண்டும். ஏனெனில் சொத்து
செல்வங்களில் ஸகாத் தவிர்ந்த கடமைகளும் இருக்கின்றன. இதுதான் மார்க்கத்தில்
கூறப்பட்டதாகும். இதை யார் கடைபிடித்து நடக்கிறாரோ அவருக்கு நலவுகளும் ஈடேற்றமும்
கிட்டும். சீர்திருத்தம் மார்க்க வழிமுறைகளுக்கு மாற்றமானதிலே இருக்கிறது. அல்லது
மார்க்கத்தின் பேரில் முன்வைக்கப்படும்
சுய கருத்தில் இருக்கிறது என நம்புபவர் பேர்கெடுக்கப்பட்டவராகும்.
தொடரும்
No comments:
Post a Comment