Wednesday, October 11, 2017

ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 05

ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 05

நெஞ்சிலிருந்து வெளிப்படும் சப்தம்
                                                                    
அதாவது ஒன்றை அடைய வேண்டுமென்ற ஆசை, கவலை மிகைக்கும் போது நெஞ்சிலிருந்து வெளிப்படும் சப்தமாகும். இதையே புகாரியில் இடம்பெறும் பேரிச்ச மரத்தின் அடிப்பகுதி முனங்கிய சம்பவம் உணர்த்துகிறது.
இப்னு உமர் றழியல்லாஹு அன்ஹுமா அறிவித்தார்கள் :
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்த படி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரை மேடையை அமைத்த பின்னால் அதற்கு மாறி விட்டார்கள். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தன்னை பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு அந்த மரம் ஏக்கத்துடன் முனங்கியது. உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பிரிவுடன்) வருடிக்கொடுத்தார்கள்.  புகாரி (3583)
               
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் றழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் ஜூம்ஆ நாளின் போது (பள்ளிவாசளின் தூணாக இருந்த) ஒரு மரம் அல்லது பேரீச்ச மரத்தின் (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்த படி (உரையாற்றிய வன்னம்) நின்று இருந்தார்கள். அப்போது ஒரு அன்ஸாரி பெண்மணி அல்லது அன்ஸாரித் தோழர் இறைத் தூதர் அவர்களே நாங்கள் உங்களுக்கு ஓர் உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா? என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்.) என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு மிம்பர் உரை மேடை ஒன்றை செய்து கொடுத்தார்கள். ஜும்ஆ நாள் வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் (உரை நிகழ்த்திட) உரை மேடைக்குச் சென்றார்கள். உடனே அந்த பேரீச்ச மரப்பட்டை குழந்தையைப்போல்  சத்தமிட்டு அழுதது. பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் இறங்கி அதை அனைத்துக் கொண்டார்கள். அமைதியாக்கப்படுவதற்காக முனங்கிக்கொண்டிருக்கும் சிறுவனைப்போன்று சத்தம் இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் 'தன்மீது இருந்த படி உரை நிகழ்த்தும் போது அது கேட்டுக் கொண்டிருந்த நல்லுபதேசத்தை நினைத்து அழுது கொண்டிருக்கிறது எனக்கூறினார்கள்.
                                                     புகாரி (3584)
அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் பிரிவைத் தாங்க முடியாமல் முனங்கி அழுத போது அதை தடவி அதற்கு வேறொரு பிரதிபலனை கொடுத்து அமைதிப்படுத்தினார்கள். ஒன்றை அடையவேண்டும் என ஆசைவைத்து கவலைகொண்டு அதற்காக முனங்குவது கூடும் என்பதை இதன் மூலம் விளங்கமுடிகிறது. அவ்வாறு முனங்கும் சப்தம் கூடாததாக வெறுக்கத்தக்கதாக இருக்குமானால் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அங்கீகரித்திருக்கமாட்டார்கள்.

எனவே அல்லாஹ்வின் நல்லடியார்கள் அல்லாஹ்வை அடைய வேண்டும் என்ற பேரவாவில் கவலையில் இறை தரிசனத்தை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட விடயமாகும். இங்கே ஹதீஸின் 'அன்ன - யயின்னு' என்ற முனங்குதல் என்ற அர்த்தத்தைக்கொண்ட சொல்லே உபயோகிக்கப்பட்டுள்ளது. இது போன்றே கருத்தையே 'அவ்வாஹ்' என்ற சொல்லும் கொண்டுள்ளது.

ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸில் கூறப்பட்ட முனங்குதல் என்ற விடயம் புகாரி முஸ்லிமில் இடம்பெறும் ஈத்தம் மரக்குற்றி சம்பந்தமான ஹதீஸ்களில் கூறப்பட்டிருப்பதாலே சில அறிஞர்கள் அந்த ஹதீஸ் புகாரி முஸ்லிமில் இடம்பெறுவதாக கூறியுள்ளார்கள். ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா அவர்களின் ஹதீஸில் கூறப்பட்ட அதே வாசகம் புகாரியில் இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்

மார்க்க ஆதாரங்கள்
 நெஞ்சில் இருந்து வெளிப்படும் ஆஹ் என்ற திக்ரை மொழிவது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதற்கான மூலாதாரங்களை சூபித்துவ அறிஞர்கள் தெளிவாக கூறியிருப்பதோடு அதற்கான குர்ஆன், ஸுன்னா ஸலபுஸ் ஸாலிஹீன்களின் நடைமுறை ஆகியவற்றைப் பற்றியும் விரிவாக பேசியுள்ளார்கள்.

1. சூரத்துத் தௌபாவின் 114 ஆவது வசனத்தில் அல்லாஹு தஆலா கூறியிருக்கிறான்.
 நிச்சயமாக இப்றாஹீம் 'அவ்வாஹ்' ஆனவர் துன்பங்களைக் சகித்துக் கொள்ளக்கூடியவர்.
'அவ்வாஹ்' என்ற வார்த்தைக்கு 15 பொருள்கள் இருப்பதாக 'தப்ஸீருல் ஜாமிஃ லிஅஹ்காமில் குர்ஆன்' என்ற தப்ஸீரில் குர்துபி இமாம் சுருக்கமாக கூறியுள்ளார்கள். (இக்கருத்துக்களுக்கான ஆதாரங்களை இமாம் தபரி அவர்களுடைய தப்ஸீரில் சூரா தௌபாவின் 114ஆம் வசன விளக்கத்தில் விரிவாகக் கூறியுள்ளார்கள்.)
முதலாவது: 'அவ்வாஹ்' என்றால் அதிகம் துஆக் கேட்பவர், இதை இப்னு மஸ்ஊத் றழியல்லாஹு அன்ஹு, உபைத் இப்னு உமைர் றழியல்லாஹு அன்ஹு ஆகியோர் கூறியுள்ளார்கள்.
இரண்டாவது: மிகவும் கிருபையுள்ளவர் இதை ஹஸன் றஹ்மதுல்லாஹி அலைஹி, கதாதா றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
மூன்றாவது : உறுதி கொண்டவர் இதை இக்ரிமா, அதா றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
நான்காவது : அபீஸீனிய மொழியின் பிரகாரம் இறை விசுவாசி, இதை இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா கூறியுள்ளார்கள்.
ஜந்தாவது : தஸ்பீஹ் செய்பவர் இதை ஸஈத் இப்னு முஸய்யிப் றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
ஆறாவது : அதிகம் அல்குர்ஆனை ஓதுபவர், இக்கருத்தையும் இப்னு அப்பாஸ் றழியல்லாஹு அன்ஹுமா அவர்களே கூறியுள்ளார்கள்.
ஏழாவது : ஆஹ் என்று சொல்பவர். இதை அபூ தர் றழியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள்.
எட்டாவது : மார்க்க சட்ட வள்ளுனர். இதை முஜாஹித் றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
ஓன்பதாவது : உள்ளச்சத்துடன் சஞ்சலப்படுபவன். இதை அப்துல்லாஹ் இப்னு ஷத்தாத் இப்னுல் ஹாதி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களைத் தொட்டும் அறிவித்துள்ளார்கள்.
பத்தாவது : பாவங்களை நினைத்து விட்டால் பாவமன்னிப்புக் கேர்ருபவர் இதை அபூ அய்யூப் றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
பதினொராவது : அதிகம் திக்ர் செய்பவர் இதை உக்பத் இப்னு ஆமிர் றழியல்லாஹு அன்ஹு கூறியுள்ளார்கள்.
பன்னிரென்டாவது : பாவங்களின் காரணமாக அதிகம் ஆஹ் என்று சொல்பவர். இதை பர்ராஃ றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
பதிமூன்றாவது : நல்லதைக் கற்றுக்கொடுப்பவர். இதை ஸயீத் இப்னு ஜூபைர் றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
பதின்னான்காவது : இரக்க குணமுள்ளவர். இதை அப்துல் அஸீஸ் இப்னு யஹ்யா றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
பதினைந்தாவது : அல்லாஹு தஆலா வெருக்கும் அனைத்தை விட்டும் மீள்பவர். இதை அதா றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியுள்ளார்கள்.
'தஅவ்வுஹ்' என்பது மூச்சி உயரும் போது நெஞ்சில் இருந்து வெளிப்படும் சப்தத்தையே குறிக்கிறது. கஃப் றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருப்பதாவது : இப்றாஹீம் (அலை) நரகத்தைப் பற்றி ஞாபகம் வந்துவிட்டால் 'ஆஹ்' என்று சொல்வார்கள்.
                                  தப்ஸீருல் குர்துபி – (8195)
அல்லாமா இப்னு ஆஷூர் றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களது 'அத்தஹ்ரீர் வத் தன்வீர்' என்ற தப்ஸீரில் மேற்கூறப்பட்ட கருத்துக்களை தொகுத்துக் கூறியுள்ளார்கள்:
'அவ்வாஹ்' என்பதை பல அர்த்தங்களைக் கொண்டு விபரிக்கப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் ஒன்று தன் மீது இரக்கபட்டு கவலை கொண்டு அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கி அவனிடம் பாவமன்னிப்பு கோருவதாகும். மற்றையது மனிதர்கள் மீது இரக்கம் கொண்டு அவர்கள் மீது இரக்கம் காட்டுவதும் பிரார்த்திப்பதுமாகும்.

'அவ்வாஹ்' என்பது அதிகம் 'ஆஹ்' என்று சொல்வதையே கூறிக்கிறது. இதை உச்சரிப்பதில் 13 முறைகள் இருப்பதாக 'காமூஸ்' என்ற அகராதியில் கூறப்பட்டுள்ளது. அதில் மிகப்பிரபல்யமானது 'அவ்வஹ்' என்று சொல்வதாகும்.

ஷர்ஹுத் தஸ்ஹீல் என்ற நூலில் முராதி றஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருப்பதாவது : அவ்வஹ் என்று சொல்வதே மிகப் பிரபல்யமானதாகும். வருத்தத்தை வெளிப்படுத்துவதற்காக உபயோகிக்கப்படும் நிகழ் கால 'இஸ்மு பியல்' என்ற வகையை சார்ந்ததாகும் . எனினும் அவ்வஹ் என்பது இரக்கம், உள்ளம் மிருதுவாகுதல், கவலைப்படுதல் போன்ற அருத்தங்களுக்கே வருத்தும் இல்லாதவர்களுக்கு மறைமுகமாக உபயோகிக்கப்படுகிறது.

இந்த 13 முறைகளில் ஆவ்வஹூ, ஆவவ்ஹூ, அவ்ஹி, அவ்ஹ, ஆஹ், அவ்விஹ், அவ்வி, அவ்வதாஹ் போன்றன சிலதாகும்.
தொடரும்

No comments:

Post a Comment