ஆஹ், அஹ் என்று திக்ர் செய்யலாமா? தொடர் - 03
தொடரும்
2- அல்லாஹ் என்ற சொல்லிலிருந்து
சுருக்கப்பட்டது
அல்லாஹ் எனும் திருநாமத்தைச் சுருக்கியே ஆஹ் என்றும்
அஹ் என்றும் திக்ரு செய்யப்படுகிறது. இது அதிகமான ஷாதுலியா தரீக்கிலே காணப்படும் விஷேட
திக்ரு முறையாகும். இது நாவின் உதவியின்று நெஞ்சத்தாலும், தொண்டையாலும் செய்யப்படுவதால் 'ஸத்ர்' 'ஹல்க்' எனப்படும். இப்படியான முறையில் திக்ர் செய்வது சரியா? பிழையா? என்று ஆராய்வோம். அனேகமாக திகர் வகைகளில் ஈடுபாடற்றோரும்
அதோடு சம்பந்தப்பட்ட விடயங்களில் ஆராச்சி குன்றியோரும் மாத்திரமே பிரஸ்தாப திக்ர் முறையை
ஆட்சேபித்து பேசவும், எழுதவும் செய்திருக்கின்றனர்.
அவர்களது இந்த ஆட்சேபனை அருத்தமற்றதென்பதை கீழ்வரும் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
அல்லாஹ் எனும் நாமத்தை
ஆஹ் என்றோ அஹ் என்றோ சுருக்குவது அரபு இலக்கணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டமாகும்.
அரபிகளின் சில பிரிவார் அவ்வாறு மொழிகின்றனர் என்றும் அவசரமாக திக்ர் செய்பவர்களுக்கு
அது உதவுகின்றது என்றும் இலக்கண வல்லுனர் ஸப்பான் என்பவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்
ஸூபிய்யாக்களும் மார்க்கச் சட்ட அறிஞர்களும், குர்ஆன் விரிவுரையாளர்களும் 'ஹா' எனும் அச்சரம் இருக்குங்காலமெல்லாம் அல்லாஹ் என்ற சொல்லிலிருந்து எதை நீக்கினாலும்
அல்லாஹ் என்ற தன்மை மாறாது என்று கூறியிருக்கின்றனர்.
சட்ட நிபுனரான இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி றஹ்மதுல்லாஹி
அலைஹி அவர்கள் 'மார்க்கத் தீரப்புகள்'
எனும் தனது நூலில் பின்வருமாறு
இது பற்றி குறிப்பிடுகிறார்கள். 'குர்ஆனில் சில அத்தியாயங்களுக்கு
முன்னால் வரும் 'காப்', 'ஹா', 'யா', 'அய்ன்', 'ஸாத்' போன்ற அச்சரங்களைப் போல் அல்லாஹ் எனும் நாமத்தில் ஒரு அச்சரத்தைக் கொண்டு திக்ர்
செய்வதும் அனுமதிக்கப்பட்டதொன்றாகும்'.
தப்ஸீர் காஸின் எனும்
பிரசித்திபெற்ற குர்ஆனின் விரிவுரையில் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது யாதெனில் இந்த
(அல்லாஹ் என்ற) நாமத்தில் இருந்து எந்த ஒரு அச்சரத்தை நீக்கிவிட்டாலும் எஞ்சிய அச்சரங்கள்
அந்த நாமத்தின் முழுமையையும் காட்டும். அல்லாஹ் என்ற அச்சரத்தில் இருந்து அலிபை நீக்கினால்
'லில்லாஹ்' என்றும் லாமை நீக்கி அலிபை வைத்தால் 'இலாஹ்' என்றும் அலிபையும் ஒரு லாமையும் நீக்கினால்
'லஹ்' என்றும்
அலிபையும் இரண்டு லாமையும் நீக்கினால் 'ஹ்' என்றும் அதாவது மொழிச்சலில் 'ஹூ' என்றும் சொல்லப்படும் என்பதாக பிரஸ்தாப தப்ஸீர் விரிவுரையாளர் விளக்குகின்றார்.
சம்சுல் மஆரிபுல்
குப்ரா, சம்சுல் மஆரிபுஸ்
ஸுக்ரா, பத்ஹுல் மலிகில் மஜீத்
ஆகிய கிரந்தங்கள் அரபு அச்சரங்களின் தன்மைகளை ஆராய்ந்து அதனை பக்குவமான முறையில் மொழிந்து
அல்லது அமைத்து மக்களுக்கு பிரயோசனம் செய்வதற்காக எழுதப்பட்ட நூல்கள் ஆகும். அவற்றில்
கூறப்பட்டுள்ளவற்றின் கருத்தாவது : -
அல்லாஹ் என்ற திருநாமம்
அஸ்மாஉல் ஹுஸ்னா எனும் அழகிய நாமங்களில் உள்ளதாகும். இதர நாமங்களுக்கெள்ளாம் அரசாய்
இருக்கும், மற்ற நாமங்களுக்கில்லாத
விஷேட தன்மை இந்த அல்லாஹ் எனும் இஸ்முக்கு உண்டு. அதில் இருந்து எந்த அச்சரத்தை நீக்கினாலும்
அதன் கருத்து வேறுபட மாட்டாது. உலூஹிய்யத் எனும் தெய்வத்தன்மை அதன் ஒவ்வொரு அச்சரத்துக்கும்
உண்டு. பிரசித்தி பெற்ற செய்காகவும், ஞானியாகவும் திகழ்ந்த சஹ்ரவர்தி றழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'லில்லாஹ்' என்றும் 'லஹூ' 'ஹூ' என்றும் திக்ர் செய்ததை
அனுமதித்து இருக்கின்றார்கள். செய்கு திம்ரா றழியல்லாஹு அன்ஹு அவர்கள் 'ஆஹ்' என்ற அச்சரத்தை மாத்திரம் சொல்லி திக்ர் செய்யும் படி தனது சிஷ்யர்களுக்குப் படித்துக்
கொடுத்தார்கள். செய்கு அப்துஸ்ஸலாம் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது சிஷ்யர் ஜஃபருக்கு
'ஆஹ்' என்று திக்ர் செய்யும்படி ஏவினார்கள். இவ்வாறு திக்ர்
செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்தி அறிஞர்கள் பல நூட்களை
எழுதியுள்ளார்கள். ஆரரவ்ழதுஷ் ஷாதுலிய்யா, அந்நுஸ்ரதுன்னபவிய்யா போன்ற நூட்கள் அவைகளில் சிலவாகும்.
செய்குல் இஸ்லாம்
ஷிஹாபுத்தீன் இப்னு ஹஜருல் மக்கி அவர்களிடம் நின்ற நிலையிலும் இருந்தும் திக்ர் செய்வது
பற்றியும் இராகத்துடன் கீதங்கள் பாடிக்கொண்டு அல்லாஹ்வின் நாமத்தை ஹூ, ஹா, ஹீ என்றெல்லாம் உச்சரித்து திக்ர் செய்வது பற்றியும் சில சமயங்களில் திக்ர் செய்பவர்கள்
அசைந்தாடுவது பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் குறிக்கப்பட்ட முறையில் திக்ர்
செய்வது ஆகும் என்றும் திக்ருடைய சமயத்தில் ஆடி அசைவது ஆகும் என்றும் பதிலளித்தார்கள்.
மேற்கூறப்பட்ட ஒரு
சில ஆதாரங்கள் மூலம் ஷாதுலிய்யா தரீக்கைச் சேர்ந்தவர்கள் அல்லாஹ் என்ற நாமத்தைத் தான்
திக்ர் செய்கிறார்கள் என்றும் அது அரபு இலக்கண விதிகளுக்கு முரணானதன்று என்றும் தெளிவாகிறது.
அத்துடன் ஷரீஅத் சட்ட நிபுணர்களின் அபிப்பிராயத்திற்கும் ஆத்மஞானிகளின் கருத்திற்கும்
ஏற்றதாகவே இருக்கிறது என்பது புலனாகிறது. எனவே அல்லாஹு தஆலா எனும் நாமத்தால் பெறப்படும்
சகல பிரயோசனங்களும் இந்த சுருக்க முறையிலான திக்ரினால் கிடைக்கும் என்பதில் சந்தேகம்
இல்லை. சடைவான நேரங்களிலும், இயலாத நேரங்களிலும்
குறிப்பாக ஸக்ரதுல் ஹால் எனப்படும் மரண தருவாயில் இந்த திக்ரை செய்வது மிக இலகுவானதாகும்.
நாக்கின் உதவி இன்றியே நெஞ்சின் சத்தத்தாலும் இறுதியாக தொண்டையினாலும் மாத்திரம் இந்த
திக்ரை செய்ய முடியும். அதில் பழக்கப்பட்ட ஒருவன் மரணம் அடையும் போது இயற்கையாகவே அவன்
திக்ருடன் மரணிக்கின்றான். இறுதிக்கட்டத்தில் அவனுடைய ஒவ்வொரு மூச்சும் அவனுடைய திக்ராக
மாறிவிடுகின்றது. இந்த திக்ர் முறையைக் காதால் கேட்டும் அதில் ஈடுபட்டும் பழகிய ஒருவன்
மௌத்துடைய வேலையிலும் இறுதிமூச்சுப் போகும் போதும் அல்லாஹ்வின் திக்ருடனும் அவனது ஞாபகத்துடனும்
உலகை விட்டுப்பிரிகிறான். அவனது மறு வாழ்விற்கு இந்த திக்ரானது ஈடு இனையற்ற துணையாகும்.
திக்ரைப் பற்றி பேசும்
பாடத்தில் செய்கு ஸரூக் றழியல்லாஹு அன்ஹு அல்குதுப் செய்யிது முகம்மதுல் மஃரபி கூறியதாக
அறிவித்திருப்பது கவனிக்கத்தக்கதாகும். முஹம்மது மஃரபி கூறுகிறார்:
நான் பல இடங்களுக்கும்
சென்று கொண்டிருந்தேன் அபுல் அப்பாஸ் அல் முர்ஸி றழியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களுடைய
தோழர்களும் அல்லாஹ் எனும் நாமத்தை நாவினாலல்லாது ஸத்ரைக்கொண்டு திக்ரசெய்து கொண்டிருக்கக்
கண்டேன். அதாவது ஆஹ் என்று திக்ர் செய்துகொண்டிருந்தனர். விலங்குகள் கர்ச்சிப்பது போன்று
அவர்களுடைய சப்தம் இருந்தது. அப்போது நான் அவர்களிடம் இந்த திக்ர் என்னவென்று கேட்டேன்.
இது தான் யதார்த்த வாதிகளின் திக்ர் எனப்பதிலளித்தார்கள். அவர்கள் மீது வீசிய திக்ர்
எனும் தென்றல் காற்று என் மீதும் வீசியது. அதனால் நான் மதி மயங்கினேன். நான் அந்த போதை
நிலையில் இருக்கும் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் என்னிடம் வந்து என்னைப் பார்த்து முஹம்மதே
இது தான் ரஹ்மானுடைய மலாஇகத்துக்களின் திக்ராகும். அவர்களுடைய இரட்சகனிடமிருந்து ஞானோதயமூலம்
இது அவர்களுக்கு கிடைத்துள்ளது. அது சரியான குறிப்புணர்ச்சியுடையோர்களின் திக்ராகும்.
நீரும் அவ்வாறு திக்ர் செய்வீராக அந்த திக்ரை உடையவர்களை எதிர்க்;காதே. ஏனெனில் அவர்கள் தங்களது இரட்சகனுடைய எல்லைக்குள்
இருக்கின்றனர். இவர்களை எதிர்த்துப் பேசுவது உண்மையையும் அதனை யுடையவர்களையும் எதிர்த்துப்
பேசுவதாகும் என்று கூறினார்கள். பின்னர் அவர்களிடமிருந்து அந்த திக்ரைப்படித்து அவ்வாறு
செய்துவரலானேன். மற்றவர்களுக்கும் அவ்வாறு செய்யச் சொன்னேன். அவர்கள் ஒன்று சேர்ந்து வட்டமாக திக்ர் செய்தனர்.
இதனால் நாம்பெரும் நன்மைகளையும் மாபெரும் வெற்றிகளையும் அடைந்தோம்' என்று எடுத்துரைத்தார்.
(இது மர்ஹூம் மௌலவி
– எஸ். ஏம். ஏ. எம். முஸம்மில்
(கபூரி) B.A.Dip - in - education. அவர்களால் எழுதப்பட்டதாகும்.)
No comments:
Post a Comment